ஏழுமலைவாசன் - 10
சுவாமி! நான் கலியுகத்தில் மக்கள் படும் கஷ்டங்களை துடைப்பதற்காக பூமிக்கு வந்தவன். நானும் நீங்களும் நாராயணனின் அம்சமே. மக்களின் நன்மை கருதி, பல்வேறு அவதாரங்கள் எடுக்கிறோம். தங்கள் அவதாரம் முந்தைய யுகங்களைச் சார்ந்தது. அன்று மக்களிடம் ஒழுக்கம் இருந்தது. கலியுகத்தில், பாவம் செய்வோரே அதிகமாக உள்ளனர். ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்போர் கூட சந்தர்ப்ப சூழ்நிலையால் பாவம் செய்ய வேண்டியுள்ளது. கலியுக மக்களுக்கு, மகான்கள் நல்வழி காட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல், ஏளனமாகவே பேசுவர். வழிபாடு பற்றி பேசுவோரை பைத்தியக்காரர்கள் போல் பார்ப்பார்கள். ஆனாலும், அவர்கள் செய்யும் பாவங்களைக் கழுவுவது எனது கடமை. அதற்காகவே, நான் அவதாரம் எடுத்து வந்துள்ளேன். இந்த அளப்பரிய பணியைச் செய்வதால், தாங்கள் இலவசமாகவே எனக்கு இடம் தந்து உதவ வேண்டும். அதற்குப்பதிலாக என்னை வணங்க வருவோர், தங்களை முதலில் வணங்கியபிறகே என்னை வணங்க வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்கிக் கொள்ளலாம்,'' என்றார்.
வராஹசுவாமியும் லோகநன்மை கருதி இதற்கு சம்மதித்தார்.
பின்னர் சீனிவாசன், வராஹசுவாமி தங்கிய இடத்தின் அருகிலேயே கோயில் கொண்டார். (இப்போது திருமலையில் வெங்கடாசலபதி கோயில் அருகில் சந்திர புஷ்கரணி (தெப்பக்குளம்) கரையில் வராஹசுவாமி கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை வணங்கிய பிறகே, நாம் ஏழுமலையானைத் தரிசிக்க செல்ல வேண்டும்)
இதனிடையே சீனிவாசன் திருமலையில் குடிகொண்டிருப்பதை அறிந்த லட்சுமி
பிராட்டியார், அவரை அடைய வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். பூமியில் மானிடஅவதாரம் எடுத்துள்ள சுவாமியை தானும் மானிட வடிவெடுத்தே அடைய முடியும் என்பதால் தாயாரும் அவ்வாறான வடிவமே எடுக்க முடிவெடுத்தாள். அவள் அவ்வாறு மானிடப்பிறப்பெடுக்க காரணமும் இருந்தது.
ஒரு காலத்தில் பத்மமகாராஜன் என்ற மன்னன், குழந்தை இல்லாத காரணத்தால், தன் மனைவியோடு இணைந்து வரலட்சுமி விரதம் அனுஷ்டித்தான். விரதத்தின் பலனாக அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு 'மாசுலுங்கி' என்று பெயர் வைத்தான். இதற்கு "களங்கமில்லாதவள்' எனப்பொருள். அவள் வளர்ந்து கல்யாணப் பருவத்தின் வாசலில் நின்றாள். அந்தப் பெண்ணின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகு படைத்தவள். கவிஞர்கள் அவளை வர்ணிக்க ஆரம்பித்தால் உலகிலுள்ள ஏடுகள் போதாது. பரந்தாமன் பள்ளிகொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய பாற்கடலை திரைச்சீலையாக விரித்து எழுதினால் கூட அதில் அடங்கிவிடுமா என்பதே சந்தேகம்!
அழகு தான் அப்படிப்பட்டதென்றால், குணத்திலும் அவள் தங்கம். பக்தி சிரத்தை மிக்கவள். எம்பெருமான் நாராயணனை மனதில் எண்ணி அவர் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருப்பாள். ஒரு கட்டத்தில் மணந்தால் அந்த நாராயணனையே மணப்பது என்று முடிவெடுத்து விட்டாள். மன்னன் பத்மராஜன் மகளைப் பார்த்து சிரித்தான்.
""அட பைத்தியமே! மானிட ஜென்மம் எடுத்தவள், நாராயணனை எப்படி பர்த்தாவாக அடையமுடியும்?'' தந்தையின் கேலியை அவள் பொருட்படுத்தவில்லை. அவளது பக்தி ஆழமானது. தன்னை மணம் முடிக்க அந்த நாராயணன் வந்தே தீருவான் என்பதில் உறுதியாக இருந்தாள்.
மாசுலுங்கியின் பேரழகு பற்றி கேள்விப்பட்ட மன்னர்கள் பெரும் பொருள் கொடுத்தேனும் அவளை திருமணம் செய்து கொள்வதென போட்டியிட்டனர். அவளை யார் மணம் முடிக்க முயன்றாலும், அவனை வென்றோ கொன்றோ நாம் மணம் புரிந்து விட வேண்டும் என்று மன்னர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. மகளை இன்னும் வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல, அவளுக்கு உடனடியாக தகுந்த கணவனைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மன்னன் முடிவெடுத்தான்.
இருப்பினும், தன் முடிவை விட மகளின் முடிவே அவளுக்கு பிரச்னையின்றி இருக்கும் என்பதால், தனக்குப் பிடித்த மணாளனை அவளே தேர்ந்தெடுக்கட்டுமென சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான். மன்னாதி மன்னர்களெல்லாம் குவிந்தனர். இலங்கை பேரரசன் ராவணன் அவளைப் பற்றி கேள்விப்பட்டு, அப்படிப்பட்ட பேரழகு பெட்டழகம் தன் அரண்மனையை மட்டுமே அலங்கரிக்க வேண்டும். நம்மை எதிர்ப்பாரும் பூமியில் உண்டோ என்ற ரீதியில் வானமார்க்கமாக இலங்கையில் இருந்து வந்து சேர்ந்தான். ராவணன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததுமே, வந்திருந்த மன்னர்கள் எல்லாரும், "உயிர் பிழைத்தால் போதுமடா சாமி! இவனை எதிர்க்க யாருக்குத் துணிவுண்டு. உம்... அவன் கொடுத்து வைத்தவன். மாசுலுங்கியை மனைவியாக அடையும் பெரும் பாக்கியத்தைப் பெற்றுவிட்டான்' என்றவர்களாய், சுயம்வர மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டனர். ராவணன் மாசுலுங்கியிடமும் அவளது தந்தையிடமும் சென்று, ""பார்த்தீர்களா! பராக்கிரமம் என்றால் இதுவல்லவோ பராக்கிரமம். என்னைக் கண்டதும் உலகிலுள்ள அத்தனை அரசர்களும் ஓடிவிட்டார்கள் என்றால் என்னிலும் வலிமையானவன் உண்டோ! இந்த வீரத்துக்கு மதிப்பளித்து, மாசுலுங்கி எனக்கே சொந்தமாக வேண்டும். பத்மராஜா! உன் மகளை எனக்குத் திருமணம் செய்துவை,'' என்று அதிகார தோரணையுடன் கூறினான். மாசுலுங்கியோ மறுத்து விட்டாள்.
""சீ ராட்சஷனே! உன்னை மட்டுமல்ல! இங்கு வந்திருந்த எந்த அரசனின் கழுத்திலும் நான் மாலை போட்டிருக்கமாட்டேன். அப்படியானால், ஏன் சுயம்வர மண்டபத்துக்கு வந்தாய் என நீ கேட்கலாம். ஸ்ரீமன் நாராயணன் எங்கும் நிறைந்திருப்பவர். என் பக்தியை பாராட்டி நிச்சயம் அவர் இங்கு வருவார் என்ற நம்பிக்கையுடனேயே இந்த மண்டபத்தில் கால் எடுத்து வைத்தேன். உன்னைப் போன்ற பெண் பித்தர்களுக்கு வாழ்க்கைப்பட மாட்டேன். மரியாதையாக ஓடிவிடு,'' என்றாள். ராவணனை தன் மகளுக்கு பிடிக்கவில்லை என்பதால், அவனை அவையில் இருந்து வெளியேறும் படி பத்மமகாராஜனும் கேட்டுக் கொண்டான். ஆனால், கொடிய ராவணன் விடுவானா! மாசுலுங்கியை பலவந்தமாக தூக்கிச் செல்ல அருகில் நெருங்கினான். பத்மராஜன், ராவணனைத் தடுக்கவே, வாளை உருவிய ராவணன் பத்மராஜனை வெட்டினான். பத்மராஜனின் தலை உருண்டது. ""அப்பா!'' மாசுலுங்கியின் அலறல் அரண்மனையையே நடுங்கச் செய்தது. மணவீட்டை பிணவீடாக்கிய கொலைகார ராவணன் அதைப் பொருட்படுத்தாமல், அவளை அடைய விரும்பி நெருங்கினான்.
—தொடரும்
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments